
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குரோம்பேட்டை எம்.ஐ.டி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் இ.கா.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள “பாதுகாப்பு அறைகள்” (Strong Rooms) மற்றும் மையத்தைச் சுற்றியுள்ள மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் அவர் உறுதி செய்தார்.
மேலும், மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமராக்களின் செயல்பாடு மற்றும் அவற்றின் நேரடி ஒளிபரப்பை கண்காணிக்கும் திரைகளையும் பார்வையிட்டார்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சட்டம்-ஒழுங்கு காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் ஆகியோர் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.