
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பெயர் சூட்ட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
மரணத்திற்குப் பிறகு இந்திய அரசின் அமைதிக்கான உயரிய விருதான அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றும் வகையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி முதல்வர் விஜயை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இதனை பரிசீலித்த முதல்வர் விஜய், அந்த சாலைக்கு தமிழில் “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” என்றும், ஆங்கிலத்தில் “MAJOR MUKUND VARADARAJAN SALAI” என்றும் பெயர் சூட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேஜர் முகுந்த் வரதராஜன் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனந்தபுரத்தைச் சேர்ந்தவர். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த அவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றிய போது வீரமரணம் அடைந்தார்.