
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் உள்ள அலைச்சல்களைக் குறைக்கும் பொருட்டு, வாட்ஸ்அப் மூலமாகவே பிறப்புச் சான்றிதழ் வழங்கும் புதிய அதிரடி திட்டத்தை சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
இப்புதிய திட்டத்தின் மூலம், இனி பெற்றோர்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை. குழந்தையின் பிறப்புப் பதிவு செய்யப்பட்டவுடன், பெற்றோரின் மொபைல் போனுக்கு பிடிஎஃப் (PDF) வடிவில் பிறப்புச் சான்றிதழ் தானாகவே அனுப்பி வைக்கப்படும்.
மேலும், பெற்றோர்கள் தங்களுக்குத் தேவைப்படும் போது சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள 94450 61913 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்குத் தேவையான தகவல்களை அனுப்பி, தங்களது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை மிக எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வேலைகளை எளிதாக்கும் சென்னை மாநகராட்சியின் இந்த டிஜிட்டல் முயற்சி, சென்னை மக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.