
திண்டுக்கல் மாவட்டத்தின் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் இஆ.ப. தலைமையில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகள் இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மே 4ம் தேதி முதல், கொடைக்கானல் பேருந்து நிலையம், கோக்கர் வாக் (Coaker’s Walk), பிரையண்ட் பூங்கா (Bryant Park) உள்ளிட்ட இடங்களில் QR குறியீடுகள் வைக்கப்படுகின்றன. பயணிகள் அந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்து உடனடியாக அனுமதி டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த முயற்சி, பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, அவர்களின் சுற்றுலா அனுபவத்தை மேலும் சுலபமாகவும் இனிமையாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கொடைக்கானலில் தற்போது இ-பாஸ் (e-pass) நடைமுறை அமலில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான அனுமதிகளைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.