
சென்னை: தொழிலாளர் தினமான மே 1-ஐ முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவு தூணில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் சிவப்பு நிறச் சட்டை அணிந்து கலந்து கொண்ட முதலமைச்சர், நினைவு தூணில் மரியாதை செலுத்தியதுடன் தொழிலாளர் தின உறுதிமொழியையும் ஏற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். திமுக தொண்டர்களின் உழைப்பிற்கு உரிய பலன் அன்றைய தினம் கிடைக்கும் என்றும், திமுக வெற்றி உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் முதல்முறையாக மே தின விழா சென்னை நகரிலேயே கொண்டாடப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், தொழிலாளர்களுக்காக மே 1ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க முக்கிய பங்காற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொமுச (LPF) அமைப்பினர் கலந்து கொண்டனர்.